*இன்றைய சிந்தனை.( 02.06.2020)*
……………………………………………...................
''அச்சம் என்ற உணர்வு''
.....................................
ஓர் ஆபத்து நிகழப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, அச்சம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது...
இந்த உணர்வு அச்சமென்று பொதுமைப் படுத்தப்பட்டாலும் கவலை, பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது...
மொத்தத்தில், அச்சம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீத கற்பனையால் விளைவது...
அச்சங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின்சேதாரம்...
தோற்று விடுவோமோ எனும் அச்சத்தில் பலர் முயற்சிக்கான முதல் அடியை எடுத்து வைப்பதில்லை...
முதல் அடியை எடுத்து வைக்காதவர் எப்போதுமே பயணம் செல்லமுடியாது என்பது பொது நியதி...
வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை, 'தோல்வியடைந்து விடுவோமோ எனும் அச்சம்தான்’ என்கிறார் சேக்ஸ்பியர்.
தோல்வியும், வெற்றியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல. தோல்விகளைச் சந்திக்காத வெற்றியாளர்கள் இருக்கவே முடியாது...!
தோல்வி என்பது இயல்பானது என்பதைப் புரிந்து கொண்டாலே வெற்றிக்கான முதல் கதவைத் திறந்து விட்டோம் என்றுதான் பொருள்...
வெற்றிகளில் சிலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். தோல்விகளில் பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம்...
ஆனால், தோல்வி குறித்த அச்சத்தில் முயற்சி செய்யாமல் இருப்பதோ எதையுமே, எப்போதுமே நமக்குத் தருவது இல்லை என்பதுதான் உண்மை...
விழிப்புணர்வு என்பது வேறு, அச்சம் என்பது வேறு. தோல்விகளைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம்..
ஆனால், அதுவே ஆளை விழுங்கும் அச்சமாக மாறிவிடக்கூடாது என்பதை நாம் கவனிக்க வேண்டும்...
தோல்வி குறித்த சிந்தனைகள் எச்சரிக்கை உணர்வைத் தருபவையாக இருக்கும் வரை அவை நமக்கு நன்மை தரும்...
வாகனத்தில் பயணம் செய்யும் போது விபத்து குறித்த பயத்தில் `இருக்கை வார், (seat belt)’ அணிவது எச்சரிக்கை உணர்வு...
விபத்து குறித்த அச்சத்தில் வாகனத்தையே புறக்கணிப்பது கோழைத்தனமானது. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்...
வாழ்க்கை, பயந்தாங்கொள்ளிகளின் கைகளில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. தண்ணீர் குறித்த பயம் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொள்ள தூண்டுதலாய் இருக்க வேண்டுமே தவிர, தண்ணீரைக் கண்டால் ஓடுகிற மனதைத் தந்துவிடக் கூடாது...
ஆம் நண்பர்களே...!
*அச்சம் நமக்கு அதைத் தாண்டிச் செல்கின்ற தகுதியை உருவாக்க தூண்டுதலாய் இருக்க வேண்டும்...*
*அதைக் கண்டு விலகி ஓடுகின்ற நிலையைத் தந்துவிடக் கூடாது...*
*மொத்தத்தில் எப்படியாவது அச்சத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.. இறுதியில் அச்சம் அர்த்தமற்றது என்று எண்ணுவீர்கள்...*
ஆம் அச்சம் என்பது மடமையே...
ReplyDelete