🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
இன்றைய சிந்தனை
(12.10.2020)
…………………………………………….
விட்டுக் கொடுப்போம்...!
..........................................
இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றி விடும்...
நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது...
எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்...? ஒருவர் மேல் அன்பு பெருகும் போது தான் என்று கூறத் தேவையில்லை...
ஒருவர் மேல் அதிகமான அன்பு கொள்ளும் காரணமாகத் தானே அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக் கொடுக்கிறோம்...!
அப்படிப்பட்ட அன்புடன் நிலைத்திருக்க நாம் விட்டுக் கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும். உறவு பெருகும்.. நன்மை பயக்கும்...
நல்லவை கெட்டவை பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்துத் தெளிவான பார்வை கிடைக்கும்...
இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அன்புடனே விட்டுக் கொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது...
எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்...
அனைவருக்கும் தெரிந்த கதை தான், வாசியுங்கள்...
அது ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது...
ஒருநாள் அந்தப் பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தன...
ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன...
அந்தப் பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தைக் கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன...
முதலாவது ஆடு, "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விட வேண்டும்" என்றது...
இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன...
ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள்
செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன...
இரண்டு ஆடுகளுமே ''விட்டுக் கொடுக்கும்'' எண்ணம் இல்லாததால் அவைகள் தங்கள் பிடிவாதத்தால் மரணித்தன...
ஆம் நண்பர்களே...!
வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்- மனைவி உறவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்தப் பிடிவாத குணமே காரணம்...!
நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணதினால் தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்தப் பிடிவாத குணம்...?
விட்டுக் கொடுத்தால் வேதனை இல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டுக் கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவது தான் அதிகம்...!!
விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப் படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டுக் கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு...!!!
🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
No comments:
Post a Comment