Thursday, 19 May 2022

இன்றைய தினம்

இன்றைய தினம் மே 19 1911- பார்க்ஸ் கனடா என்ற தேசியப் பூங்காத் துறை கனடாவில் தொடங்கப்பட்டது. இது தான் உலகிலேயே முதலாவது தேசியப் பூங்காவுக்கான ஓர் அரசுத் துறையாகும். தேசியப் பூங்கா என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒத்த, இயற்கையைப் பாதுகாக்கும் அமைப்பாகும். இவை விலங்குகளையும் இயற்கை சூழ்நிலைகளையும் பாதுகாப்பதற்காக, இயற்கையாக அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட பகுதிகளாகும். இவற்றுக்கான வரையறை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்டாலும், இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (IUCN-International Union for Conservation of Nature) பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் ஆகியவை, ஆயிரம் ஹெக்டேருக்கு குறையாத பகுதி, சட்டப்படியான பாதுகாப்பு அளிக்கப்படுதல், அணைகள் கட்டுவது உட்பட இயற்கை வளங்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்குத் தடை ஆகியன உள்ளிட்ட சில அடிப்படைக் கூறுகளை வரையறுத்துள்ளன. இவையனைத்திற்கும் ஒரே பொதுவான நோக்கம் வனத்தையும், இயற்கையையும் பாதுகாப்பது தான். உலகின் முதல் தேசியப் பூங்காவாக 1872-ல் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா குறிப்பிடப்படுகிறது. இது உருவாவதற்கு காரணமாக இருந்த ஜான் ம்யூர் என்பவர், தேசியப் பூங்காக்களின் தந்தை என்று போற்றப்படுகிறார். இதற்கு முன்பே 1778-ல் மங்கோலிய அரசு உருவாக்கிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி, தேசிய பூங்காவுக்கான தற்போதைய வரையறைகளுக்கு தகுதி பெறுவதாகவே உள்ளது. 2006 வரை இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியப் பூங்காக்கள் 6,555. உலகின் மிகப்பெரிய தேசியப் பூங்காவாக வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா விளங்குகிறது. இந்தியாவில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, முதுமலை உள்ளிட்ட 102 தேசியப் பூங்காக்கள் ஐயூசின் தகுதி பெற்றவையாக உள்ளன. தேசியப் பூங்காவுக்கான துறையை முதலில் தொடங்கிய நாடான கனடா தான் உலகிலேயே மிக அதிக அளவாக சுமார் 38 லட்சம் சதுர கிலோமீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது.

No comments:

Post a Comment