Tuesday, 30 November 2021

இன்றைய தினம்

 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடித்த அறிவியலாளர் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் - நவம்பர் 30:


வங்காளத்தின் (தற்போதைய வங்கதேசம்) விக்ரம்பூரில் பிறந்தவர். எதையும் உற்றுநோக்கும் குணமும், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இயற்கையிலேயே இருந்தது. ஓயாமல் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லக்கூடிய தந்தை கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்.


பட்டப்படிப்பை முடித்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்றார். வைஸ்ராய் சிபாரிசுடன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியர்கள் திறன் குறைந்தவர்கள் என்ற பிரிட்டிஷ் அரசு, அதே பதவி வகிக்கும் ஆங்கிலேயரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் கொடுக்கப்படும் என்றது.


கஷ்டமான சூழலிலும், தன்மானத்தை விட்டுக்கொடுக்காத போஸ் 3 ஆண்டுகள் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார். அறிவாற்றல், கற்பிக்கும் திறனால் பேரும் புகழும் பெற்றார். தவறை உணர்ந்த கல்வித் துறை இயக்குநர் தனது முயற்சியால் முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கான 3 ஆண்டு ஊதியத்தையும் மொத்தமாக வழங்கியது அரசு.


இந்த பணத்தில் தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். தன் ஆயுள் முழுவதையும் ஆராய்ச்சிக்கே அர்ப்பணிப்பது என 1894-ல் முடிவெடுத்தார். முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ந்தார். மின் அலைகள், கம்பிகளின் உதவியின்றி பொருட்களைக் கடந்து செல்லக்கூடியவை என்று கண்டறிந்தார்.


மின்காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மைகளை (quasi-optical) கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தார். மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட நுண்ணலைகளை உருவாக்கும் இயந்திரத்தை முதன்முதலில் வடிவமைத்தார்.


போட்டோகிராபிக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் ராயல் சொசைட்டி இதழில் வெளிவந்தன. லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டம் வழங்கியது.


பல நாடுகளின் அறிவியல் கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின. விருதுகள் குவிந்தன.


இவரது ஆராய்ச்சி தாவரவியல் பக்கம் திரும்பியது. தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சிகள் உண்டு என்பதை ஆதாரங்களுடன் பாரீஸ் மாநாட்டில் நிரூபித்தார். இந்த உண்மைகளை கண்கூடாகக் காட்ட உதவும் ‘ரெஸனன்ட் ரெக்கார்ட்’, ‘கிரெஸ்கோகிராப்’ ஆகிய கருவிகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார்.


‘ரெஸ்பான்ஸ் இன் லிவிங் அண்ட் நான் லிவிங்’, ‘த நெர்வஸ் மெக்கானிஸம் ஆப் பிளான்ட்ஸ்’ ஆகிய 2 நூல்களும் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.


ஆண்டு வருமானத்தில் தனது அத்தியாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செலவழித்தார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் உயில் எழுதிவைத்த இந்த தேசபக்த விஞ்ஞானி 79 வயதில் காலமானார்.


Sir Jagadish Chandra Bose,(30 November 1858 – 23 November 1937), was a Bengali polymath, physicist, biologist, biophysicist, botanist and archaeologist, and an early writer of science fiction. Living in British India, he pioneered the investigation of radio and microwave optics, made significant contributions to plant science, and laid the foundations of experimental science in the Indian subcontinent.


IEEE named him one of the fathers of radio science. Bose is considered the father of Bengali science fiction, and also invented the crescograph, a device for measuring the growth of plants. A crater on the moon has been named in his honour.

No comments:

Post a Comment