செப்டம்பர் பகுதி 9
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை பொம்மைகள். அதுவும் புசுபுசுவென இருக்கும் "டெடி பியர்" பொம்மையை விரும்பாத குழந்தைகளே இல்லை. உணவூட்டுவது, மருத்துவம் பார்ப்பது, தூங்கவைப்பது என டெடி பியர்களுடன் விளையாடும் மழழைகள் ஏராளம். டெடி பியரை விரும்பும் பெரியவர்களும் நிறைய இருக்கிறார்கள்.
இன்று செப்டம்பர் 9 அமெரிக்காவில் தேசிய டெடி பியர் தினம். டெடி பியர் பொம்மையின் வயது 100 ஆண்டுகளை கடந்துவிட்டது.
நீண்ட காலமாக கதைகளில் இடம்பெற்ற கரடிகள், பொம்மை வடிவம் பெற்றது 19-ம் நூற்றாண்டில் தான். ஜெர்மனியைச் சேர்ந்த மார்கரெட் ஸ்டெயிப் எனும் பொம்மை வடிவமைப்பாளர் 1899-ல், 23 விதமான பொம்மைகளுக்கு வடிவமைப்பு செய்யப்பட்டு காப்புரிமை பெற்றுள்ளார்.அதில் நடனமாடும் கரடி மற்றும் கரடி மற்றொரு சிறிய கரடியை கையில் வைத்திருக்கும் பொம்மை போன்ற பொம்மைகள் அடக்கம்.
நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் என்ற இடத்தில் மோரிஸ் மிக்டாம் என்பவர் தனது பொம்மை கடையில் முதல் டெடி பியர் கரடி பொம்மையை விற்பனைக்கு வைத்திருந்தது வரலாற்றில் பதிவாகி உள்ளது.1902-ல அவர் கரடி பொம்மையை விற்பனை செய்ய தொடங்கி உள்ளார்.
ஜெர்மனியில் இருந்து 1903-ல் ஸ்டெயிப் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் கரடி பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்கா முழுவதும் விற்பனைக்கு வந்து இறங்கின.
அப்போது கரடி பொம்மைகள் "புருயின்ஸ் "என அழைக்கப்பட்டது. அப்போதைய பருவ இதழ்களிலும் கரடி பொம்மைகள் இந்த பெயரிலேயே விளம்பரங்கள் செய்யப்பட்டது.
1906-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா பொம்மை தயாரிப்பாளரான இ.ஜே.ஹார்ஸ்மேன் என்பவர் தான் தயாரித்த கரடி பொம்மைகளுக்கு "டெடி பியர்" எனும் பெயர் சூட்டி விளம்பரங்கள் செய்தார். " ஆலிஸ் கார்ட்" என்பவர் எழுதிய மாயாஜால கதைகளில் டெடி பியர் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது.அதை மையமாக வைத்து அவர் தனது பொம்மைக்கு இந்த பெயர் சூட்டினார்.
1909-ல் டெடி பியர் பொம்மை கார்ட்டூன் வடிவம் பெற்றது. அமெரிக்காவில் "லிட்டில் ஜானி அண்ட் த டெடி பியர் " என்ற கார்ட்டூன் காவியம் வெளிவந்தது.
டைட்டானிக் கப்பல் 1912-ல் கடலில் மூழ்கிய போது ஸ்டெயிப் பொம்மை நிறுவனம் கருப்பு நிறத்தில் டெடி பியர் பொம்மையை வெளியிட்டு துக்கம் அனுசரித்தது.
லண்டன் நாளிதழில் கரடி பொம்மை பற்றிய காமிக் கதைகள் இடம் பெற தொடங்கியதால் இங்கிலாந்தில் டெடி பியர் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது.
வால்ட் டிஸ்னி முதன் முதலில் 1924-ல் வண்ண அனிமேஷன் படத்தை உருவாக்கினார். அதில் கதாநாயகர்களே டெடி பியர் கள்தான். " ஆலிஸ் அண்ட் தி திரீ பியர்ஸ்" என்ற கரடி அனிமேஷன் படம் தான் அந்த முதல் அனிமேஷன் படம்.
கரடி பொம்மைகளில் மிகவும் புகழ்பெற்றது "வின்னி த பூ" பொம்மை தான்.இது 1926-ம் ஆண்டு ஏ.ஏ.மில்னி கதையில் இந்த கரடி பொம்மை உருவம் வெளியாகி இருந்தது.
1944-ல் அமெரிக்காவில் காட்டுத்தீ விழிப்புணர்வு இயக்கத்துக்காக "ஸ்மோக்கி பியர்" எனும் கரடி பொம்மையை உருவாக்கி விளம்பரங்கள் செய்யப்பட்டது.
1953-ல் ஸ்டெயிப் உருவாக்கிய கரடி பொம்மையின் 50 ஆண்டு விழா ( கோல்டன் ஜூப்லி) கொண்டாடப்பட்டது. அப்போது "ஜேக்கி பேபி" என்ற பெயரில் கரடிக்குட்டி என்ற புதிய வகை கரடி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.
வென்டி பாஸ்டன் என்பவர் 1954-ல் முதன் முதலாக துவைத்து சுத்தமாக்கி பயன்படுத்தும் கரடி பொம்மையை உருவாக்கி அசத்தினார்.
1958-ல் மற்றொரு புகழ்பெற்ற கரடி பொம்மை வகையான "பட்டிங்டன் பொம்மை" அறிமுகம் செய்யப்பட்டது. மைக்கேல் மாண்ட் எழுதிய கதைகளில் இடம்பெற்ற இந்த கதாபாத்திரம் பொம்மையாக உருப்பெற்றது.
வால்ட் டிஸ்னி,1959-ல் "வின்னி த பூ பொம்மையை" முக்கிய மாற்றங்கள் செய்ததுடன் அதைப் பயன்படுத்த சில விதிமுறைகள் வகுத்தார்.
கலோனியல் பாப் கெண்டர்சன்1962-ல் "டெடி பியர் கிளப்" ஒன்றை தொடங்கினார்.
" வின்னி த பூ" கதாபாத்திரம் 1975-ல் சினிமா திரைப்படமாக வெளிவந்து வரலாறு படைத்தது.
லண்டனில் 1985-ல் டெடி பியர் ஏல மையம் கிறிஸ்டி என்பவரால் தொடங்கப்பட்டது. இங்கு டெடி பியர் பொம்மைகள் மட்டுமே ஏலம் விடப்பட்டது குறிப்பிடதக்கது.
இங்கிலாந்தில் மைக்கேல் பிரான்ரெத்,1988-ல் டெடி பியர் அருங்காட்சியகம் தொடங்கினார்.
1989-ல் லண்டனில் முதல் டெடி பியர் திருவிழா கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் 1926-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட "ஸ்டெயிப்" பழைய கரடி பொம்மைகளுக்கான நினைவு திருவிழாவும் நடத்தப்பட்டது.அப்போது பழமையான ஒரு பொம்மை 55 ஆயிரம் பவுண்டுகள் தொகைக்கு ஏலம் போனது.பால் வோல்ப் என்ற அமெரிக்கர், தனது 42-வது திருமண நாளுக்காக இந்த பொம்மையை ஏலத்தில் எடுத்து மனைவி ரோஸ்மேரிக்கு பரிசளித்தார்.
1994-ல் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்ட டெடி பியர் பொம்மை உலக பிரசித்தி பெற்றது.1904-ல் தயாரிக்கப்பட்ட மிகப்பழமையான ஸ்டெயிப் கரடி பொம்மையை ஜப்பானைச் சார்ந்த யோகினோ செகிகுசி என்பவர் ஒரு லட்சத்து பத்தாயிரம் பவுண்டுகள் ஏலம் எடுத்தார். ஜப்பானில் தான் தொடங்கிய அருங்காட்சியகத்தை பிரபலப்படுத்த இதை ஏலத்தில் எடுத்தார்.
No comments:
Post a Comment