Wednesday, 16 June 2021

இன்றைய தினம்

 நோபல் தனித்துப் பெற்ற முதல் பெண்மணி பார்பரா மெக்லின்டாக் பிறந்த தினம் - ஜூன் 16:

 

1923ல் பார்பரா செல்லியல் பாடத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து பயின்று முதுகலைப்பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். 1931ல் தேசிய ஆராய்ச்சிக்கழகத்தின் கல்வி உதவித்தொகை பெற்று இரண்டு ஆண்டுகள் கார்னல் பல்கலைகழகம், மிசோரி பல்கலைகழகம், கலிபோர்னியா தொழில் நுட்ப மையம் ஆகியவற்றில் மரபியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1936ல் மிசோரி பல்கலைகழகத்தின் மரபியல் துறையின் உறுப்பினரானார். ஆனால் பெண் என்ற பாகுபாடு காரணமாக அவருக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளா; 1941ல் அங்கிருந்து விலகினார்.


தொடர்ந்து மரபியல் ஆய்வில் ஈடுபட்ட பார்பரா 1951ல் தனது மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். 'குரோமொசோம்களில் உள்ள மரபணுக்கள் அவ்வப்போது தங்களின் இடங்களை மாற்றிக் கொள்கின்றன' என்றும் கண்டுபிடித்துக் கூறினார். இதைக் 'குதிக்கும் மரபணுக்கள்' என்று வர்ணித்தார். அதோடு மரபணுக்கள் தங்களைத் தாங்களே பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளும் என்பதையும் நிருபித்தார். அவரிடம் பாகுபாடு காட்டிய பல்வேறு ஆய்வாளர்களும் அவரைத் தேடி வந்து பாராட்டினர். மரபியல் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றழைக்கப்பட்டது.


அமெரிக்க மரபியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தேசிய அறிவியல் அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்ட மூன்றாவது பெண்மணி என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.


மரபியலில் அவர் கண்டுபிடிப்புகளுக்கு 1983ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.




வியப்பூட்டும் அறிவியல்

(விண்வெளி பெண் வாலண்டினா 16-6-63)


விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் பெண்ணான வாலண்டினா தெரஸ்கோவாவை வோஸ்டாக்-6 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். 2 நாட்கள் 22 மணிநேரம், 50 நிமிடங்கள் விண்வெளியிலிருந்த  வாலண்டினா,48 முறை புவியைச் சுற்றி வந்தார். அதுவரை அமெரிக்க விண்வெளி வீரர்கள் மேற்கொண்டிருந்த மொத்த விண்வெளிப் பயண நேரத்தைவிட இது அதிகம். இன்று வரை தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஒரே பெண் வாலண்டினாதான். விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ராணுவம் சாராத முதல் மனிதருமான வாலண்டினா. விண்வெளி வீரராவதற்காக, விமானப் படையில் கவுரவ உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். நெசவுத் தொழிற்சாலை ஊழியராக இருந்து, விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பித்து,400 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாலண்டினா.

   இப்பயணத்தின் போது வாலண்டினா எடுத்த படங்களே வளிமண்டலத்தில் உள்ள தூசுப்படல அடுக்குகளை அடையாளம் காண பின்னாளில் உதவின. ஏற்கனவே விண்வெளிப் பயணம் மேற்கொண்டவரான ஆண்ட்ரியான் நிக்கோலாயேவ் என்பவரை 1963-ல்  வாலண்டினா திருமணம் செய்து கொண்டார்.1964-ல் இவர்களுக்குப் பிறந்த குழந்தையே, தாய்- தந்தை இருவரையும் விண்வெளி வீரர்களாகக்கொண்ட முதல் குழந்தையாகும். வாலண்டினா ரஷ்ய பாராளுமன்ற (டூமா) உறுப்பினராகவுமிருந்துள்ளார்.

   விண்வெளிக்கு முதல் பெண்ணை மட்டுமன்றி, முதல் மனிதரை அனுப்பியதும் சோவியத் ஒன்றியம் தான். 1957-ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்-1ஐ அனுப்பியதுடன், விண்ணிலிருந்து முதலில் சமிக்ஞை பெற்ற நாடாகவும் சோவியத் மாறியது. ஸ்புட்னிக்-2ல் லைக்கா என்ற நாயை அனுப்பி, விண்வெளிக்கு உயிரினத்தை அனுப்பிய முதல் நாடாகியது. சோவியத்தின் லூனா-2தான் நிலவினை அடைந்த முதல் விண்கலம். லூனா-3தான் நிலவின் எதிர்ப்பகுதியை படமெடுத்த முதல் விண்கலம். 1960-ல் ஸ்ட்ரெல்க்கா, பெல்க்கா என்ற இரு நாய்களை விண்வெளிக்கு இட்டுச் சென்று பாதுகாப்பாக புவிக்குக் கொண்டு வந்தது ஸ்புட்னிக்-5. ஸ்ட்ரெல்க்காவின் குட்டிகளில் ஒன்று ஜாக்குலின் கென்னடிக்குப் பரிசளிக்கப்பட்டது.  1961 ஏப்ரலில் முதல் மனிதராக யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியது உட்பட, விண்வெளி ஆய்வில் சோவியத்தின் முன்னேறிய நிலையே நிலவுக்கு மனிதனை அனுப்புவதாக அமெரிக்காவை அறிவிக்கச்செய்தது.


No comments:

Post a Comment